அது ஒரு கனா காலம். ஒரு கவலையும் இல்லாமல் எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் ஊர் சுற்றிய காலம். வீட்டில் உள்ள பாட்டிகளுக்கும் அத்தைகளுக்கும் மற்ற நமது பதினெட்டு பட்டி உறவினர்களுக்கும் சேவை செய்து வந்த காலம். இவர்கள் ஆஸ்பத்திரி மற்றும் கடைகளுக்கு செல்லும் போதும் ஒரு வெட்கமும் இல்லாமல் அவர்களுக்கு சுமை தூக்கியாக இருந்த நேரம். அவர்கள் கொடுக்கும் அஞ்சு மற்றும் பத்து ரூபாயில் அனைத்து ஆஸ்பத்திரியின் கேண்டீன்களிலும் சாப்பிட்டு உடம்பை வளர்த்த காலம். அனைத்து கேண்டீன் முதலாளிகளும் நமக்கு நண்பர்கள் ஆகினர். GG ஆஸ்பத்திரியில் கேண்டீன் வைத்திருந்த ஜிமிக்கி மாமிக்கு என் மீது மிகவும் பிரியம். "ஏன்டா அம்பி சும்மாதான இருக்க கொஞ்சம் இட்லி மாவு ஆட்டி தாயேன். நேத்திக்கு வடை கொஞ்சம் மீந்து போச்சு , நாய்க்கு தூக்கி போடலாம்னு இருந்தேன். உன் நியாபகம் வந்துச்சு இந்தா சாப்புடு " என்று உரிமையாக சொல்லும் அளவுக்கு ஒரு பிரியம். இது கொஞ்சம் ஓவரா போயி நம்ம பதினெட்டு பட்டியில யாருக்கு உடம்பு முடியாம போனாலும் எனக்கு சேதி சொல்ல ஆரம்பிட்சாங்க. ஒவ்வொரு ஆஸ்பத்திரிலையும் ஒரு செட் ஜட்டி பனியனை கொடுத்து வைக்கிற மாதிரி ஆகி போச்சு. இப்படி நோபல் பரிசுக்கு போற அளவுக்கு நம் சமூக சேவை நடந்தது.
இந்த நேரத்துல ஒரு நாள் நம்ம பாடாவதி அக்கா மற்றும் பல உறவினர்களை அழைச்சுட்டு பர்மா பஜார் போக சொல்லி பாட்டி உத்திரவு. காலைல அழைச்சுட்டு போயி நைட்டு வரைக்கும் ஷாப்பிங். நான் கார்ல தேவுடு காத்தல். செலவுக்கு 20 ருபாய் கொடுத்துச்சு. நானும் அதுல நல்ல சாப்டேன். இரண்டு நாள் கழிச்சு பாடாவதி அக்கா வீட்டுக்கு போனால்(கூட்டு குடும்பம்) அங்க செலவு நோட்டுல ஜாங்கோ ஜக்கு சாப்ட்டு செலவு ருபாய் 50 அப்படின்னு போட்டு இருந்தது. பாத்தவுடன் எனக்கு தலை சுற்றியது. பா ..தி அக்கா பண்ண முப்பது ருபாய் செலவை என் பெயர்ல எழுதி இருந்தது. இப்படியே போன நம்மளை ஒரு ரேஞ்சுக்கு கொண்டு போயிடுவங்கன்னு பயந்து வேலைக்கு போக ஆரம்பிதேன்.
உடனே எங்க அம்மா எனக்கு கல்யாணம் பண்ணனும்ன்னு சொன்னாங்க
பா..தி அக்காவின் மூத்த அக்கா செந்தலை ( தலைக்கு பர்கண்டி கலர் டை அடிச்சுட்டு திருப்பதி கோயில்ல செக்யூரிட்டி ஜருகண்டி சொன்னப்ப பாரு என் தலைய பாத்து பருகண்டி சொல்றன்னு பெருமை பீத்துனதால வந்த பெயர்) அதுக்கு ஒரு பொண்ணு அதுக்கு ஒரு கண்ணு. அந்த பொன்னை இந்த வெட்டி பயலுக்கு கேட்டுடுவாங்கலோன்னு அதுக்கு ஒரு பயம். இதை வெளியில சொல்லவும் முடியல மெல்லவும் முடியல. அதுக்கு பொன்னை அமெரிக்க பையனுக்கு கொடுத்து அங்க ஜீன்ஸ் டி-ஷர்ட் பிகினி எல்லாம் போட்டு சுத்தணும் ஒரு ஆசை. இந்த பையனுக்கு பொன்னை கல்யாணம் பண்ணி வைச்சு கிராமத்துல அதை செய்றது ஒரு தயக்கம் ஒரு மயக்கம். எப்படி இவனை கழட்டி விடுருதுன்னு ஒரு யோசனை. உடனே முந்தானை முடிச்சு படம் நியாபகம் வந்தது. அதுல தீபா கிழவங்களுக்கெல்லாம் ஒரு கயிறை கட்டி அண்ணன்னு சொல்லுமே அதை மாதிரி செஞ்சுடிலாம் என்று யோசித்து, அந்த கயிறு என்ன என்று விசாரித்தது. அதன் பெயர் "ராக்கி " கயிறு என்றும் அது வடஇந்தியாவில் பிரபலம் என்றும் தெரிந்தது. அவசரத்துக்கு ராக்கி கிடைக்கததால் ஒரு மஞ்சள் கயிறை ஒரு சுப யோக சுப தினத்தில் அதன் பெண் சொக்கா கையில் கொடுத்தது. அந்த பெண்ணும் ஒரு மஞ்சள் கயிறோடு என்னை நோக்கி வந்து " மாமா " என்று கூப்பிட நான் அதை கல்யாணம் செய்ய சொல்ல போகிறது என்று பயந்து ஓட, நான் ராக்கியின் பொருள் தெரிந்து ஓடுகிறேன் என்று செந்தலை துரத்த , செந்தலை வளர்த்த அலமேலுவும் துரத்த தெருவே வேடிக்கை பார்த்தது. பிறகு எனக்கு விஷயம் புரிந்து நானும் ஒத்துகொள்ள ராக்கி வைபவம் முடிந்தது.
பிறகு தெருவில் வந்து "இனிமேல் ஜாங்கோ ஜக்கு சொக்காவுக்கு அண்ணன் , முறை பையன் இல்ல " என்று கத்தி அறிவிக்க , அந்த தெருவில் வயசு பொண்ணு வச்சிருந்த அம்மாக்கள் எல்லாம் செந்தலையிடம் டிப்ஸ் வாங்கி பேல் பேலாக ராக்கி கயிறை செந்தலலையிடம் விலைக்கு வாங்கி தெருவில் உள்ள ஆம்பிளைக்கு எல்லாம் கட்டுனாங்க. பெண் நாய் வளர்த்த எழுத்த வீட்டு பொட்டு மாமி , பக்கத்துக்கு வீடு ஆண் நாய்க்கு இதை கட்டி விட்டாங்கனா பார்த்துகோங்க நம்ம செந்தலையின் கயிரோட மகிமையை.
பி.கு : இந்த விஷயத்தை கேள்வி பட்ட என் அம்மா சொக்காவிடம் இருந்து தப்பியதுக்கு மண் சோறு சாப்பிட்டு பத்தாயிரம் ஏழைகளுக்கு அன்ன தானம் அளித்தார்கள்